நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நீதிபதி 9,000 டொலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் (30) டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, தன்னுடனான தகாத உறவுகளை மூடி மறைக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு ரூ.1 கோடி கொடுத்தது தொடர்பாக அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகிறது.
இதன்போது இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது, ஆனால், அந்த உத்தரவினையும் மீறி அவர் வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இதன் காரணமாக அவர் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி டிரம்ப் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவருக்கு நீதிபதி 9,000 டொலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்தார்.
அதுமாத்திரமன்றி அவர் நீதிமன்ற உத்தரவை மீண்டும் மீறி செயற்பட்டால் சிறையில் அடைக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
தற்போது அமெரிக்காவில் அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் பதவி வகித்து வருகிற நிலையில், நடப்பு ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் அதிபர் பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இடையே போட்டி நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

