கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக
நேற்று பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள்
வீடுகளுக்குச் செல்லவில்லை’ என அவர்களது பாதுகாவலர்களால் கினிகத்தேனை
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவிகள் இருவரும் நேற்று காலை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக
அம்பகமுவ தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளனர். ஒருமாணவி
அவரது பெற்றோருடன் பரீட்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தாக
முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போயுள்ள இரண்டு மாணவிகளும் நண்பர்கள் என்றும் கினிகத்தேன,
அக்ரோயா மற்றும் நாவலப்பிட்டி நாகஸ்தான பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்றும்
பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு அருகில் இருவரும்
உரையாடியிருந்ததை சில மாணவிகள் அவதானித்திருந்தாகவும் முறைப்பாட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போன மாணவிகளின் தகவல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார்
விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

