Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஹர்த்தால் சொல்லும் செய்தியை ஜனாதிபதி கவனத்தில் எடுக்க வேண்டும்-மனோ கணேசன்

ஹர்த்தால் சொல்லும் செய்தியை ஜனாதிபதி கவனத்தில் எடுக்க வேண்டும்-மனோ கணேசன்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் இம்மாதம் 15ஆம் திகதி,
முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலை தாம் ஆதரிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி
தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ‘

ஐந்து தமிழ் இளைஞர்கள், 8ஆம் திகதி முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்கு
சிப்பாய்களால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

தப்பி சென்றவர்களில் ஒருவரான,கபில் ராஜ்,  9ம் திகதி முல்லை முத்தையன்
கட்டு குளத்தில் சடலமாக மீட்க பட்டுள்ளார். தப்பி சென்ற ஏனைய நால்வர், தம்மை
இராணுவத்தினர் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே என்ன நடந்தது என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல.

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழரசு கட்சி, ‘நீதியான
விசாரணை’, ‘வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு’ ஆகிய
கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஹர்த்தாலை
நாம் ஆதரிக்கிறோம் .

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க,  இது தொடர்பான உடனடி விசாரணை, சட்ட நடவடிக்கை, ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் இதை அடிப்படையாக கொண்டு,  வடக்கு கிழக்கின் மேலதிக இராணுவ பிரசன்னத்தை உடன் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘இராணுவ பிரசன்னம் குறைப்பு’ என்பதுதான் இந்த ஹர்த்தால் சொல்ல போகும் செய்தி. போர் செய்த இராணுவம் சும்மா இருக்காது. அதிலும் இன அடிப்படையிலான போர் செய்த இராணுவ சிப்பாய்களின் மனங்களில் இனவாதம் தங்கி இருக்கத்தான் செய்யும்.

எனவே அவர்களை தென்னிலங்கைக்கு கொண்டு வந்து, ‘குளம் வெட்டுவது, குளத்தில்
தூர் எடுப்பது, வீதி அமைப்பது, வீடு கட்டுவது, ஹோட்டல் நடத்துவது, தோட்டம் செய்வது,  காய்கறி சந்தை நடத்துவது’ போன்ற பிற அபிவிருத்தி பணிகளில். ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க,  ஈடுபடுத்த வேண்டும்.

‘இதற்கு முன் இப்படியான சம்பவங்கள் நடக்க வில்லையா? அப்போது நீங்கள் என்ன
செய்தீர்கள்?’ என எம்மை பார்த்து, தம்மை அறிவாளிகள் என நினைத்து கொண்டு,
கேள்வி கேட்கும்,  ஜேவிபி அமைச்சர்கள்,  எம்பிக்கள் ஆகியோரின் வாய்களையும்
ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க மூட வேண்டும்.

‘அன்றைய அரசுகள் மாறி, மாறி செய்தவற்றை செய்ய நாம் வரவில்லை. மாற்றி செய்யவே நாம் வந்தோம்’ என நீங்கள் தான் மக்களுக்கு கூறினீர்கள். அதேயே தான் நீங்களும் செய்ய வந்தீர்கள் என்றால், நாம் எதிர்க்கத்தான் செய்வோம்.

அரச இராணுவ பயங்கரவாதத்தை, நாம் அப்போதும் எதிர்த்தோம். இப்போதும்
எதிர்கின்றோம். எப்போதும் எதிர்ப்போம். வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடை பெற அழைப்பு விடுத்து இருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் கோரிக்கையை,  தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்று,  ஆதரவை அறிவிக்கின்றது’ இவ்வாறு மனோகனேசனின் அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments