கிண்ணியா கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் ஏற்பட்ட
வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்துள்ளது.
கிண்ணியா பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் விவசாயிகளுக்கும்
இடையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் நில மீட்புப் போராட்டமும் மோதல்களும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.
அதனைத் தீர்க்கும் நோக்கில் நேற்று (02) மாலை வானஎல பொலிஸ் நிலையத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது பொலிஸ் பொறுப்பதிகாரி கருத்து தெரிவிக்கையில்,
விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களையும் பயிர்களையும் பாதுகாப்பான வேலிகளை அமைத்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கால்நடை வளர்ப்பாளர்கள், கால்நடைகள் பயிர்களை சேதப்படுத்தாமல் அவற்றைப்
பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இனிமேல், வேளாண்மைப் பயிர்களைக் கால்நடைகள் சேதப்படுத்தினால், அதற்கான முறைப்பாடுகளை ஆதாரங்களுடன் முன்வைக்கும் பட்சத்தில் குறித்த கால்நடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கால்நடைகளை வெட்டுவதற்கோ அல்லது சேதப்படுத்துவதற்கோ எவருக்கும் உரிமை
கிடையாது எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த, ‘வேளாண்மைப் பயிர்களை வேலி
போட்டுப் பாதுகாப்பது விவசாயிகளின் பொறுப்பு, மாடுகளை வேளாண்மை நிலத்துக்குச் செல்லவிடாது பாதுகாப்பது கால்நடை வளர்ப்பாளர்களின் பொறுப்பு’ என்ற கருத்தை கால்நடை வளர்ப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
அதனையடுத்து கூட்டத்தில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, அது கைகலப்பு வரை
செல்லவிருந்த நிலையில், கால்நடை வளர்ப்பாளர்கள் உடனடியாக கூட்டத்தை விட்டு
வெளியேறினர்.

