யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளை, காலம் கடத்தாமல் துரிதப்படுத்துமாறு கோரி பல்கலைக்கழக முன்றலில் இன்று (09) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
‘பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பின்
அழைப்பில் இந்தத் திடீர் போராட்டம் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரும், மற்றொரு நபரும்
இணைந்து மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக்
கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாகஇ பல்கலைக்கழக மட்டத்தில்
விசாரணைக் குழு அமைக்கப்பட்டு தற்போது விசாரணைகள்
நடைபெற்று வருகின்றன.
எனினும் , இந்த விசாரணைகளை இழுத்தடிக்காமல், உடனடியாகச் செய்து
முடிக்குமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘பாதிக்கப்பட்டவர்களின் குரல்களைக்
கேளுங்கள் – அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!’
‘பல்கலைக்கழகங்களில் பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி
செய்ய வேண்டும்!’ , ‘குற்றத்தை மறைக்கச் சட்டத்தை ஆயுதமாக்காதே!’ ,
‘கண்ணியத்தை இழந்து கல்வியைப் பெறும் இடமா யாழ். பல்கலைக்கழகம்?’
‘தமிழர் பண்பாட்டிற்கு உணர்ச்சி கொள்ளும் பல்கலைக்கழகமே… பாலியல்
சுரண்டல்களுக்கு மௌனம் ஏன்?’ போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய
பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

