தமது அதிகாரிகளுக்கு 2026 ஜூலை 7 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள்
நுழைய அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டின் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின்
(இல. 21) கீழ், முன் அறிவிப்பின்றி எந்நேரத்திலும் தடுப்புக் காவல் நிலையங்கள்
மற்றும் சிறைச்சாலைகளுக்குள் நுழைந்து பார்வையிடும் அதிகாரம்
ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனியாதலைமையில் 2026 ஜூலை 14 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், அன்றைய தினம் சிறைச்சாலையில் நிலவிய பாதுகாப்பு சீர்குலைவு காரணமாகவே அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
ஏற்பட்ட சூழ்நிலையை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு
உரிய முறையில் அறிவிக்கத் தவறியமைக்கு வருத்தம் தெரிவித்த சிறைச்சாலை
அதிகாரிகள். இனி இதுபோன்ற சம்பவங்கள் மீள நடைபெறாது என
உறுதியளித்தனர். எனினும், வழங்கப்பட்ட விளக்கத்தில் ஆணைக்குழு
திருப்தியடையவில்லை என தெரிவித்துள்ளது.
அதேவேளை. நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகளுக்கு
எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும்
குற்றச்சாட்டுகள் குறித்தும் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக சித்திரவதை, மருத்துவ சிகிச்சை மறுப்பு, கைதிகள் எங்கு
வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்களது குடும்பங்களுக்கு அறிவிப்பதில்
ஏற்பட்ட தாமதம் மற்றும் தண்டனை காலம் முடிந்த பின்னரும் சிலர் தொடர்ந்தும்
தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக
கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத்
தொடர்ந்து எழுந்த சித்திரவதை, தவறான நடத்தைகள் மற்றும் காவலில்
ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முழுமையான
ஒத்துழைப்பை வழங்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு
மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

