முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை
ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக
விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்திற்கு
அதிகமாக 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை ஈட்டியமை
தொடர்பான இவ்வழக்கு இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி
மொஹமட் மிஹாயில் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி,
இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு
உத்தரவிட்டார்.
அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை விடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தனது
சட்டபூர்வ வருமானத்தை மீறி 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான
சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதன் மூலம் இலஞ்சச் சட்டத்தின் கீழ்
குற்றம் புரிந்துள்ளதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

