கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் அளுத்பார பகுதியில் T56 துப்பாக்கியுடன்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில்
பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் பிற்பகல் குறித்த சந்தேக நபர் T56 துப்பாக்கி, 30 தோட்டாக்கள் மற்றும் 05 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், மேற்படி சந்தேக நபர் இந்த
துப்பாக்கியை வவுனியாவிலிருந்து கொழும்பு பகுதிக்கு கொண்டு வந்தது,
வேறொரு தரப்பினருக்கு கொடுத்து குற்றம் செய்த பின்னர் இந்த துப்பாக்கியை
வவுனியாவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபரிடமிருந்து தெரியவந்த தகவலின் அடிப்படையில், வவுனியா பிரிவு
குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகள் குழு, மேற்படி சந்தேக நபருடன்
நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த மற்றொரு சந்தேக நபரை நேற்று
செட்டிகுளம் பொலிஸ் பிரிவின் நேரியகுளம் பகுதியில் முச்சக்கர வண்டியில்
10 கிராம் ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்ற வேளை கைது செய்தனர்.
சந்தேக நபர் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் என
தெரியவந்துள்ளது.
மேற்படி சந்தேக நபரிடமிருந்து தெரியவந்த தகவல்களின் அடிப்படையில்,
சந்தேக நபரின் வீடு மற்றும் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு
வகையான 86 கைக்குண்டுகள், T 56 ரக 321 தோட்டாக்கள், 5600 போதைப்பொருள்
மாத்திரைகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதன்படி, மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சந்தேக நபர்கள் பயங்கரவாத
விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

