மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை ஒரு மாதகாலத்திற்கு
இடைநிறுத்தி வைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய
விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வன்னிமாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் நேற்று புதன்கிழமை (13) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து
கலந்துரையாடலொன்றை நடாத்தியிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.
கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கையில்,
மன்னார் தீவில்இ மக்கள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் இத்தகைய காற்றாலைத்
திட்டங்கள் தேவையில்லை. அத்தோடு மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு மன்னார் மக்கள் எதிரானவர்களில்லை.
மன்னார்த் தீவிற்குள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் காற்றாலை மின் உற்பத்திக்
கோபுரங்கள் அமைக்கும் செயற்பாட்டையே மன்னார் மக்கள் எதிர்க்கின்றனர்.
இதேவேளை கடந்தகால இனவாத அரசாங்கங்கள் இத்தகைய காற்றாலை மின்உற்பத்திக் கோபுரங்களை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதிகளை வழங்கியுள்ளபோதும், காற்றாலை அமைப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை கேட்டறியவில்லை.
காற்றாலைத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன், இவ்விடயத்தில்
மன்னார் மக்களின் அபிப்பிராயங்களும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று
வலியுறுத்தப்பட்டது.
கலந்துரையாடலின் இறுதியில் காற்றாலைத் திட்டத்தை ஒரு மாதகாலத்திற்கு
இடைநிறுத்தி, மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதென தீர்மானிக்கப்பட்டது.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர்களான
துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன்,
காதர் மஸ்தான், ரிஷாட் பதியுதீன், உபாலி சமரசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன்
ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், மன்னார் பிரஜைகள் குழு உறுப்பினர்கள்
உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

