காலத்தை இழுத்தடித்து, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை மறுக்கும்
அரசாங்கத்தின் கொள்கையை வன்மையாகக் கண்டித்தும், லலித், குகன்
ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச முன்னிலையாகாமைக்கு எதிராகவும் இன்று யாழ். நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சம உரிமைகள் இயக்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டம்
யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தின் போது. ‘செம்மணியை மீண்டும் புதைக்க இடமளியோம்’
, ‘அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்’, ‘மேலதிக அடக்குமுறைச்
சட்டங்கள் வேண்டாம்'”PTA ஐ நீக்கு”‘, ‘அனைத்து இன மக்களுக்கும்
சமவுரிமையை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்பை வென்றெடுப்போம்’,
ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டக்காரர்களால் கோசங்கள்
எழுப்பப்பட்டன.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை
காணாமலாக்குவதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டதுடன்,
இலங்கையின் குற்றங்கள் மலிந்த அரசிலால் இன்றுவரை பல குற்றவாளிகள்
எவ்வித தடையுமின்றி சுதந்திரமாக நடமாடுகின்றனர். அவர்களுக்கு எதிராக
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் மந்தகதியிலேயே உள்ளது என்றும்
போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.
மேலும் வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக
போராடிய லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர்
காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு இன்று யாழ்ப்பாணம்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கின் சாட்சியாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்
கோட்டாபய ராஜபக்ச சாட்சியமளிக்க நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ள
நிலையில், இவர் இந்த வழக்கில் சாட்சியமளிப்பதைத் தொடர்ச்சியாகத்
தவிர்த்து வந்ததுடன், தற்போது இணையவழியாக சாட்சியமளிப்பதற்கு
நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளார்.
இவ்வாறு நீதிமன்றத்தைத் தொடர்ச்சியாகப் புறக்கணிப்பதற்கு எதிராகவும்,
அனைத்துக் காணாமலாக்கப்படல்களுக்கும் நீதியை வழங்க வேண்டும்
என்றும் பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டி இன்றையதினம் குறித்த
போராட்டம் முன்னெடுக்கபட்டது.

