Friday, April 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும்,  பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்கவை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர் இன்று (27) பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று
(27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதுடன்,  மேலதிக விசாரணைகளுக்காக காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ரத்கம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மனோஜ் மெண்டிஸின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில்,  கடந்த 2016 ஆம் ஆண்டு ‘பொடி லெசி’ முதன் முதலில் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் மனிதக் கொலைகள்,  துப்பாக்கிகளை தம் வசம் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இவர்,  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பூசா சிறைச்சாலையில் இருந்தபோது,  சிறைச்சாலை
அதிகாரிகள் குழுவொன்றுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பாக இவருக்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக
2018 ஆம் ஆண்டு இவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.

எனினும்,  கடந்த 2024 டிசம்பர் மாதம் வரை பிணை நிபந்தனைகளை நிறைவேற்றாததால் அவர் சிறையிலேயே இருந்தார்.

பின்னர்,  2024 டிசம்பர் 9 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையான அவர்,  ஒரு இலட்சம் ரூபாய் பணப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளைச் செலுத்திவிட்டு வெளியேறினார்.

நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும்இ
பிணை நிபந்தனைகளை மீறி அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கடந்த 2025
ஜனவரி மாதம் மும்பையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு சட்ட உதவி வழங்குவதற்காக இலங்கையிலிருந்து இரு சட்டத்தரணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா சென்றிருந்தனர்.

இந்திய பாதுகாப்புப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில்,  அவரை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்காக நேற்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரு அதிகாரிகள்
இந்தியா சென்றிருந்ததுடன்,  அவர்களது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட
சந்தேக நபர் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments