கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானை ஒன்று தனியார் பேருந்தை தாக்கியதால் அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (03) காலை 11.00 மணியளவில் கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
கதிர்காமம் – புத்தல வீதியில் மின்சார வேலி காவலரணுக்கு அருகில் இந்த விபத்து
இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சிலாபத்திலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற குழுவினரை ஏற்றிச்
சென்ற தனியார் பேருந்துஇ புத்தல – கதிர்காமம் வீதியால் பயணித்துக்
கொண்டிருந்த போதே வீதியிலிருந்த காட்டு யானை அதனை தாக்கியுள்ளது.
யானையின் தாக்குதலால் பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளதுடன்,
விபத்து இடம்பெற்ற போது அதில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக
தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த சுமார் 10 பேர் சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களின்
நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

