வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை
எதிர்வரும் 13 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண
பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் இன்று மதியம் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய
காற்று சுழற்சி தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக
திருகோணமலையின் இறக்கண்டிக்கு மிகச் சரியாக கிழக்கு திசையில்
96 கி.மீ. இல் காணப்படுகிறது.
இது இன்று மாலை மேற்கு திசை நோக்கி நகர்ந்து இரவு அல்லது நாளை அதிகாலை
முல்லைத்தீவுக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடைப்பட்ட பகுதியின் ஊடாக
(திருகோணமலையின் சில பகுதிகளையும் உள்ளடக்கி) நிலப்பகுதிக்குள் நுழைந்து
மன்னார் ஊடாக மன்னார் வளைகுடா கடற்பகுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.
இந்த நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலப்பகுதிக்குள் உள்நுழையும் போது
நிலமேற்பரப்பு தன்மை காரணமாக இன்று இரவு முதல் திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசும் வாய்ப்புள்ளது.
தற்போது கொந்தளிப்பான நிலையில் கடற்பகுதிகள் காணப்படுகின்றன.
இந்த நிலைமை 13.12.2024 வரை தொடரும். அதனால் எத்தகைய தேவைக்கும்
கடற்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

