ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணையாவிட்டாலும் பத்தாவது நிறைவேற்றதிகார
ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார் எனவும்
இவ்வாண்டிறுதியில் நாட்டில் மீண்டும் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பெண்கள் தொடர்பான பிரகடனம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அது மாத்திரமின்றி நாட்டுக்கு தேவையான பல்வேறு சட்டங்கள் அவரால் முன்வைக்கப்பட்டன.
பொருளாதார அபிவிருத்தி சட்டம்இ ஊழல் எதிர்ப்பு சட்டம், கடனை எவ்வாறு மீள செலுத்துவது என்பதற்கான தேசிய கொள்கை சட்டம் என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.
இவ்வாறான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, சர்வதேச நிதி நிறுவனங்கள்
அனைத்தும் பெண்களின் பங்கேற்புடனான அபிவிருத்தி திட்டங்களில் பணம்
பாதுகாக்கப்படுவதாகக் குறிப்பிட்டனர்.
அதற்கமைய அந்த சட்டங்களில் பெண்களுக்கு பெருமளவில் முன்னுரிமையளிக்கப்பட்டிருந்தது. இவற்றில் மத்திய வங்கி சட்டமும் உள்ளடங்குகின்றது. இவற்றுக்கு புறம்பாக செயற்பட முடியாது.
ஐக்கிய தேசிய கட்சி ஒரேயொரு ஆசனத்தைப் பெற்ற போது அதன் அரசியல் பயணம்
முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் அந்த ஒரு ஆசனமே வங்குரோத்தடைந்திருந்த நாட்டை அதிலிருந்து மீட்டது
என்பதை நினைவுபடுத்துகின்றேன்.
ஒரு ஆசனத்தை வைத்துக் கொண்டு ஜனாதிபதியானதைப் போன்றுஇ ஆசனம் இன்றியும் ஜனாதிபதியாக முடியும்.
சிறப்பாக செயற்பட்டால் 10ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியையும் ஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்க முடியும்.
அது ஜனநாயக ரீதியிலோ, அரசியலமைப்பு ரீதியிலோ அல்லது பொருளாதார நெருக்கடியிலோ இடம்பெறலாம். நான் அறிந்த வகையில் இவ்வாண்டிறுதியில் நாட்டில் மீண்டும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்.
ஜே.வி.பி. கூறும் 77 ஆண்டு சாபத்தில் தேங்காய் 80 ரூபாவாகும். உப்பு பக்கட் 100 ரூபா மாத்திரமே. ஆனால் இன்று தேங்காய் 230 ரூபா, உப்பு 280 ரூபா.
1977இல் ஜே.ஆர்.ஜயவர்தன அனைவருக்கும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி யுகத்தை தோற்றுவித்தார். ஆனால் இன்று முச்சக்கரவண்டியின் விலை 20 இலட்சமாகும். பாரதூரமான அவல நிலையை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

