தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் இன்று (30) இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தில் சிக்கி 45க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் தொடரும் வெயில் காலம் காரணமாக, வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு பலர் சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மாலை 6 மணியளவில் ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி பயணித்த பேருந்து ஏற்காடு மலையின் 11 ஆவது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறித்த பேருந்தில் பயணித்த 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

