புத்தளம் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூனைப்பிட்டி கிராமத்தில் உள்ள தோட்டமொன்றில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி உபகரணங்களுக்கு இனந்தெரியாதோரால் நேற்று (09) இரவு தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடப்பு , பூனப்பிட்டி பகுதியைச் சேர்ந்த வை. கே. முத்தையா என்பவர் இந்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரம், கரைவலை, கம்மான் கயிறு, மீன்பிடி வலை, மடி உள்ளிட்டவை இந்த தீயினால் முற்றாக எரியூட்டப்பட்டுள்தாகவும் உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இனந்தெரியாதோரால் தீவைக்கப்பட்டமையினால் தனக்கு சுமார் 75 இலட்சத்திற்கும் கூடுதலான பொருட்கள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அதன் உரிமையாளர் கூறினார்.
சம்பவம் நடந்த போது, குறித்த தோட்டத்தில் எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் போது அந்த தோட்டத்திற்கு வந்த இனந்தெரியாதோரால் தீவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதிலும் தீயினால் அங்கிருந்த மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

