Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஏனையவையாழ். ஆதீன முதல்வரை சந்தித்து ஆசிபெற்ற ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பு

யாழ். ஆதீன முதல்வரை சந்தித்து ஆசிபெற்ற ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பு

ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பு காலத்தின் தேவை என வலியுறுத்திய தென்னிந்திய திருச்சபையின்,  யாழ். ஆதீன முதல்வர் கலாநிதி வேலுப்பிள்ளை பத்மதயாளன்,  அந்த கட்டமைப்பு தமிழ் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை படைக்க வேண்டும் என வாழ்த்தினார்.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் நேற்று மாலைதென்னிந்திய திருச்சபையின் யாழ். ஆதீன முதல்வரை சந்தித்து ஆசிபெற்றனர்.

இதன்பின்னர் சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே தென்னிந்திய திருச்சபையின் யாழ். ஆதீன முதல்வர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய செயற்பாடுகள் பொருத்தமற்று காணப்படுவதாலும் போதிய வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தால் புதிய கட்டமைப்பு மக்களால் வரவேற்கப்படுகிறது. அதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,  சட்டத்தரணிகள் என சமுதாய விழிப்புணர்வை விரும்பும் தலைவர்கள் இருப்பதை பாராட்டுகிறோம். பேராயராக ஒரு விடயத்தை கூறிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ் மக்களின் வாழ்வியலுக்காக இதயசுத்தியுடன் பாடுபடும் எந்த தலைவனையும் நான் உண்மையிலேயே தலைவணங்குகிறேன். ஏனென்றால் அது காலத்தின் தேவை. எமது மக்களின் வாழ்வியலை பாதுகாக்க
புதிய கட்டமைப்பு உண்மையிலேயே பாடுபடும் என எதிர்பார்க்கிறேன்.

வாக்காளர்கள் யாரையும் எதிர்க்க வேண்டும் என கூறவில்லை. மாற்றத்தை உணர்ந்து உண்மைகளை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். இது எமது தலையில் விழுந்துள்ள பாரிய பொறுப்பு. இந்த கூட்டமைப்பு சிறந்து விளங்கி பாராளுமன்றத்தில் ஜனநாயகத்திற்கும் உண்மைக்கும் நீதி நியாயத்தை வெளிப்படுத்தி தமிழ் மக்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து சகோதர சிங்கள முஸ்லீம் இனங்களுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும். இதற்காக அனைத்து மக்களும் பாடுபட்டு வாக்களிக்க வேண்டும் என மனதார வேண்டுகிறேன் – என்றார்.

குறித்த சந்திப்பில் சனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பு வேட்பாளர்களான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வடக்கு மாகாண முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,  விமலேஸ்வரி,  நாவலன்,  குணாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments