தென் கொரியாவில் உள்ள விமான நிலையத்தில் 181 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் பலர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சுவரில் மோதியதாக
விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி முவான் சர்வதேச விமான நிலையத்தில் சுவரில் மோதியதாக தென் கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
175 பயணிகள் மற்றும் 6 விமானப் பணிப்பெண்களை ஏற்றிச் சென்ற Jeju Air விமானம் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்ததாகவும், தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இரண்டு பேர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 28 பேர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகள் இன்னும் நடந்து வருவதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
https://x.com/i/status/1873174704720425440
இதனிடையே, விமானத்தின் வால் பகுதியில் உள்ளவர்களை மீட்க அவசர சேவைகள் முயற்சித்து வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் 173 தென் கொரியர்களும் இரண்டு தாய்லாந்து நாட்டவர்களும் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பறவைகள் சிக்கியதால்
விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், விமானத்தின் அமைப்புகளில் பறவைகள் சிக்கியதால் ஏற்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள காணொளிகளில் விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கி சுவரில் மோதியதைக் காட்டுகிறது. பின்னர் நெருப்பு கோளமாவதும், கரும்புகை எழுவதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், ஒரு விமானப் பணிப்பெண் மற்றும் ஒரு பயணி இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவின் தீயணைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்து நடந்த இடத்திற்கு 32 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

