தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக
இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே
திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக 10 விசேட ரயில்கள் சேவையில் சேர்க்கப்படும் என்று ரயில்வே
பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
அதன்படி, இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு
ஒரு விசேட ரயில் இயக்கப்படும், அதே நேரத்தில், பதுளையிலிருந்து கொழும்பு
கோட்டைக்கும் ரயில் ஒன்று பயணிக்கவுள்ளது.
இன்று இரவு 7.20 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காலிக்கு
ஒரு விசேட ரயில் இயக்கப்படும், அதே நேரத்தில் காலியில் இருந்து கொழும்பு
கோட்டைக்கு ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளது.
மேலும்இ இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு
விசேட ரயில் ஒன்று பயணித்ததுடன், அந்த ரயில் மீண்டும் எதிர்வரும் 18 ஆம் திகதி
திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த 10 விசேட ரயில்கள் ஊடாக புத்தாண்டு பருவம் மற்றும் நீண்ட
வார இறுதி விடுமுறை நாட்களில் 31 பயணங்களை முன்னெடுக்க
திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர்
தம்மிக ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் மக்களின் தேவைகளைப்
பூர்த்தி செய்ய போதுமான பேருந்துகளை இன்றைய தினமும் இயக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்
செயல்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அதுக்கோரல
தெரிவித்துள்ளார்.

