தொழில் சட்டத்துக்கமைய தமது நிறுவனத்தை மூடுவது தொடர்பில் நெக்ஸ்ட்
நிறுவனம் அமைச்சுக்கோ தொழில் திணைக்களத்துக்கோ எந்தவொரு
முன்னறிவித்தலும் வழங்க வில்லையென்றும் இழப்பீட்டுச் சூத்திரமொன்றை
முன்வைக்க அந்த நிறுவனம் யோசனை முன்வைத்துள்ளதாகவும்
தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
நேற்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க நெக்ஸ்ட் தொழிற்சாலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் கவனம்
செலுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளளோம்.
இந்த நிறுவனத்தின் 04 பிரிவுகளில் 2, 825 ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 1, 416 பேருக்கு தொழில் இல்லாமல் போகுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1992ஆம் ஆண்டிலிருந்து நீண்டகாலம் இந்த நிறுவனத்தில் பணியாற்றிவரும்
பணியாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். இந்நிலையில் இந்த
நிறுவனத்தை மூடுவதாக கடந்த 19ஆம் திகதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், நிறுவனங்களை மூடுவதற்கு முன்னர் தொழில் அமைச்சுக்கு அறிவிக்க
வேண்டும் என்பது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழில் சட்டத்தை அறிந்த நிறுவன
உரிமையாளர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் அவர்கள் முன்னறிவித்தல்
வழங்கவில்லை.
தற்போது வரையில் இழப்பீட்டு சூத்திரமொன்றை வழங்கியுள்ளார்கள். அதுதொடர்பிலும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம்.என்றார்.

