மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று
உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில்
நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்தில் நேற்று தீவக மக்கள்
ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூறி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்தனர்.
படுகொலை செய்யப்பட உறவுகளின் வாழும் உறவுகளில் இருவர் முதன்மைச் சுடரேற்றி நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்தனர்.
குறித்த நிகழ்வில் ஏற்பாட்டாளர் பிரகலாதன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி.அசோக்குமர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து தமது உணர்வுகளை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினர்.

1990 ஆம் ஆண்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது
மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும்
அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும்
பலர் கொல்லப்படும் இருந்தனர்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப்
பகுதியில் குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் பல்வேறு தரப்பினரும் கூறினர்.

