தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த்தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாள் யாழ்ப்பாணம் – நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நல்லூர் கந்தன் ஆலயம் அருகே அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி
நடைபெற்று, தொடர்ந்து, நல்லூரான் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது காலை 10.48 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
தியாக தீபம் திலீபனின் நினைவிடம் நோக்கி மக்கள் உணர்வெழுச்சியுடன் காவடியெடுத்து வந்து நினைவேந்தல் கடமையை மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை, தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாளான இன்று
ஊரெழுவில் அமைந்துள்ள அவர் பிறந்து வாழ்ந்த காணியில் இருந்து
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஊர்தி பவனிகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகியிருந்தன.
இவ் ஊர்தி பவனியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்
செல்வராசா கஜேந்திரன், நடராஜர் காண்டீபன் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்
தவிசாளர் தியாகராஜா நிரோஷ், தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர்கள்
மற்றும் பிரதேசசபை உறுபபினர் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும்
கலந்துகொண்டிருந்தனர்.


