முறைப்படியான தேடுதல் ஆணை இல்லாது பொலிசார் முன்னெடுத்துவரும் சட்ட
முரணான செயற்பாடுகளை கண்டித்து வடக்கின் சட்டத்தரணிகள் ஒரு நாள்
பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
யாழ் மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு,
மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும்
நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகளின் பிரசன்னத்துடன் குறித்த போராட்டம்
யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் முன்னிலையில் இன்று காலை
இடம்பெற்றது.
கடந்த 5 ஆம் திகதி முறையற்ற வகையில் காணி ஒன்றிற்கு உரிமம் ஏற்பாடு
செய்துகொடுத்ததாக கூறி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும்
பெண் சட்டத்தரணி ஒருவரின் இல்லத்தில் அவரை கைது செய்ய நுழைந்த
யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார், குறித்த வீட்டில் சட்டத்தினால் வழங்கப்பட்ட அதிகாரம் எதுவுமின்றி தேடுதல் நடத்தும் தோரணையில் அச்சுறுத்தலாக நடந்து கொண்டுள்ளர்.
குறித்த சட்டமுரணான செயற்பாடை கண்டித்து இப்போராட்டம் இடம்பெற்றது.


