மாகாண சபைத் தேர்தலில் கட்சியோடு தொடர்புடைய – கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான எவராவது ஒருவரைத்தான் எங்களுடைய முதலமைச்சர்
வேட்பாளராகக் களமிறக்குவோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்
சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
சி.வி.கே. சிவஞானம் யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர்
சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘மாகாண சபைத் தேர்தல் தாமதிப்பது வருந்தத்தக்கது என நாங்கள்
சொல்லியிருக்கின்றோம். மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரியிருக்கின்றோம்.
முதலமைச்சர் வேட்பாளரைப் பொறுத்த வரையில் எங்களது கட்சியின் தெளிவான
நிலைப்பாடு, கட்சிக்குள்ளே இருந்துதான் நாங்கள் ஒருவரை முதலமைச்சர்
வேட்பாளராகத் தெரிவு செய்வோம்.
யாழ்ப்பாணத்திலோ – வடக்கு மாகாணத்திலோ எங்களோடு இணங்கிச் செயற்பட்டுக்
கட்சியோடு இருந்தவர்கள், கட்சிக்காக வேலை செய்தவர்கள், உழைத்தவர்கள் என
அவர்களில் ஒருவரைத்தான் நாங்கள் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்வோம்.
மேலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தக் காலத்திலும் ஒற்றையாட்சியை ஏற்றது
கிடையாது. ஒற்றையாட்சியை ஏற்றவர்கள் நாங்கள் அல்லர். தமிழரசுக் கட்சிக்கும்
ஒற்றையாட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.
ஏக்கிய ராஜ்ஜிய, ஒற்றையாட்சி என்பவற்றை நாங்கள் ஏற்கப் போவதில்லை என்பதை ஏற்கனவே அறிவித்துவிட்டோம். அப்படியிருக்கத் திரும்பத் திரும்ப இவைகளைப் பற்றிப் பேசுவதில் எந்த அர்த்தமுமே கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

