கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் வரணி வடக்கு தம்பான் பகுதியில் வீதியின்
ஒரு பகுதி தாழிறங்கி ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
இதனால் போக்குவரத்துக்கு ஒரு வழிப்பாதை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.
இதன் காரணமாக போக்குவரத்தில் நெரிசல் நிலை காணப்படுவதுடன் விபத்துக்கள்
ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் வரணிப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர் விநியோகத்திற்காக நிலத்தின் கீழ் நீர்க்குழாய்கள் பொருத்தும் வேலைகள்
இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் வரணி வடக்கு தம்பான் வாழைத்தோட்டம் பகுதியில் நீர்க்குழாய்
பொருத்துவதற்காக கொடிகாமம் பருத்தித்துறை வீதியோரமாக அமைந்துள்ள
குளத்தின் கரையோரமாக ஜேசிபி இயந்திரம் கொண்டு கிடங்கு வெட்ட முற்பட்ட போதே வீதியின் ஒரு பகுதி தாழிறங்கி ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதியை உடனடியாகச் சீர் செய்து வீதியைப் பாதுகாக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

