வடக்கின் பெரும் நீர்ப்பாசனமான இரணைமடு நீர்ப்பாசனத்தின் கீழ் இருக்கும்
28 கமக்காரர் அமைப்புகளின் மீது அர்ச்சுனா எம்.பி கூறும் குற்றச்சாட்டுக்களில்
உண்மைகள் இல்லை என்று கூறும் கமக்காரர் அமைப்புகளின் தலைவர்,
குறித்த எம்.பி உண்மைகளை ஆராயாது அரசியல் கதிரை மீது கொண்ட ஆசை
காரணமாக ஒருதலைப்பட்சமாக கருத்துக் கூறுவதை கைவிட வேண்டும்
என்றும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு
வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் ,
இரணைமடு கமக்கார அமைப்புக்களின் நிர்வாகம் பெரும் நிதி மோசடிகளில்
ஈடுபட்டுள்ளதாகவும், பதிவு செய்யப்படாத அமைப்பு என்றும்,
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது பல்வேறு
குற்றச்சாட்டுக்களை அர்ச்சுனா எம்.பி முன்வைத்திருந்தார்.
அவர் குறித்த கருத்தை கூறும் முன் எமது தரப்பின் கருத்துக்களையும்
கேட்டறிந்து நியாயமாக பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் ஒருதரப்பட்ட
கருத்தை ஆதாரமாகக் கொண்டு கருத்துக்களை கூறியிருப்பது சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
இரணைமடு குளத்தின் நீர்ப்பாசனத்தை வைத்து அரசியல் சித்து விளையாட்டை
செய்யவே குறித்த எம்.பி முயலுகின்றார்.
அதுமட்டுமல்லாது வடக்கின் நீர்ப்பாசனத்தையும் அதனுடன் தொடர்புடைய
28 கமக்கார அமைப்புகளையும் சிதைத்து விவசாயத்தையும் அழிக்கும்
நோக்கமாகவும் இந்த செயற்பாட்டை நோக்க முடிகின்றது.
எனவே உண்மைகளை ஆராயாது கமக்கார அமைப்பையும் அதிகாரிகளையும்
குறை கூறுவதை குறித்த எம்.பி கைவிட வேண்டும் என்றும் வடக்கின்
விவசாயிகளின் அவலங்களையும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு
தீர்வு காணவும் தேவைப்பாடுகளை பெற்றுத்தர முயற்சிக்க வேண்டும் என்றும்
அவர் மேலும் தெரிவித்தார்.

