தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இதுவரை முறையாக
சீர்செய்யப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்
சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள்
இது தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பேருந்து
போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில பகுதிகளில் இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச) டிப்போக்கள்
ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டாலும், ஏனைய
பகுதிகளில் டிப்போக்களில் எரிபொருள் இல்லை எனத் தெரிவிக்கப்படுவதாகவும், இதனால் பேருந்து உரிமையாளர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமையால் வரும் திங்கட்கிழமை பேருந்து சேவைகள் கணிசமான
அளவு பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்த அவர், இது குறித்து அதிகாரிகள்
உடனடியாக தலையிட்டு தீர்வை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை
விடுத்துள்ளார்.

