இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும்
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இசபெல்லா மார்ட்டின்
ஆகியோர், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை
சந்தித்துக் கலந்துரையாடினர்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில்
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (05) இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது
கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களால் தற்போது கிழக்கு மாகாணத்தில்
முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், மாகாணத்தில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகள் , உட்கட்டமைப்புத் தேவைகள் மற்றும் சமூகப் பொருளாதார சவால்கள் குறித்து பேசப்பட்டதுடன், அவற்றுக்கு அரசாங்கம் எடுத்துள்ள துரிதகதித் தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மாகாணத்தின் அமைதி, சகவாழ்வு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை
ஆகிய தற்போதைய கள நிலவரங்கள் குறித்து உயர்ஸ்தானிகர்களுக்கு
ஆளுநர் விளக்கமளித்தார்.
பிரித்தானிய அரசாங்கத்திற்கும் இலங்கையுடனான உறவை மேலும்
வலுப்படுத்துவதுடன், கிழக்கு மாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும்
வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழங்கக்கூடிய சாத்தியமான ஒத்துழைப்புகள்
குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும்
கலந்துகொண்டனர்.

