தமிழினப் படுகொலையின் 17ஆவது நினைவு தினம் இன்று முள்ளிவாய்க்கால்
நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.
இந்த நினைவேந்தல் நிகழ்வில், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான உறவுகள் வருகை தந்து, உயிரிழந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி நினைவு கூர்ந்து உணர்வெழுச்சியுடன் உறவுகள் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமாகும். அந்தவகையில் இன்றையதினம் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் யுத்தத்தின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
காலை 10.15 மணிக்கு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் கொள்கைப்பிரகடனம் வாசிப்புடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் காலை 10.29 க்கு நினைவொளி சத்தம்
எழுப்பப்பட்டு 10.30க்கு அகவணக்கமும் அதனை தொடர்ந்து, இறுதி யுத்தத்தில் நான்கு அங்கத்தவர்களை இழந்த வற்றாப்பளையை சேர்ந்த சிறீறஞ்சன் ரினோசாவால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்பட்டு இறுதியிலே மலர் வணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.
அஞ்சலி செலுத்த வந்த பலர் மலர் தூவி, தீபம் ஏற்றி மற்றும் அமைதியான
முறையில் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்தனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மதகுருமார்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும்
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு உயிர்நீத்தோருக்கு அஞ்சலி
செலுத்தினர்.

