முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி
ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை ஜூலை 03 ஆம் திகதிவரை
விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ‘ஹரக் கட்டா’ என்பவருக்கு சட்டவிரோத
உதவிகளை வழங்குவதற்காக அவரது மனைவியிடம் பெருந்தொகை பணத்தை
இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் இவர்கள் மீது
குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
2023 ஆம் ஆண்டு டுபாயில் வைத்து ‘ஹரக் கட்டா’வின் மனைவி மதுஷிகா
மதுவந்தியிடம் இருந்து முதலில் 50 கோடி ரூபாய் இவர்களால் இலஞ்சமாகக்
கோரப்பட்டுள்ளது.
பின்னர் அத்தொகை 20 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டு, அதில் முற்பணமாக
12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக இவர்கள் மீது குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘ஹரக் கட்டா’ பொலிஸாரால் கொல்லப்படுவதைத் தடுப்பது,
அவரது தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி பூஸா சிறைச்சாலைக்கு மாற்றாமல்
வேறு சிறைக்கு மாற்றுவது மற்றும் விசாரணைகளில் இருந்து அவரை
விடுவிப்பது ஆகியவற்றுக்கு உதவுவதாகக் கூறியே இந்த இலஞ்சம்
பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

