இரத்மலானை விமான நிலையத்திலிருந்து இன்று (15) பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம் விடும் நூல்கள் சிக்கியதால், அவ்விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்பப் பரிசோதனையின் போது,
விமானத்தின் இடது பக்க சக்கரம், இடது பக்க எஞ்சின் பகுதி மற்றும் மேலும்
சில பாகங்களில் பெருமளவிலான பட்டத்து நூல்கள் சிக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தின்
எஞ்சின் அல்லது அதன் செயல்பாட்டுத் தொகுதிக்குள் பட்டத்து நூல்களோ
அல்லது பட்டத்தின் பாகங்களோ நுழைந்தால், முழு விமானமும்
விபத்துக்குள்ளாகும் நேரடி அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் பட்டம் விடும் காலப்பகுதியுடன், நாட்டின் விமான ஓடுதளங்கள்
மற்றும் விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடுவது
அதிகரித்துள்ளமையால், விமானங்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளது.
உலகளவில் விமான விபத்துக்கள் ஏற்படுவதற்கு விமான ஓடுதளங்களுக்கு
அருகில் பட்டம் விடுவது ஒரு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது விமானப் பறப்பு நடவடிக்கைகளுக்கு நேரடித் தடையாகவும் அமைகிறது.
இதன்படி கட்டுநாயக்க, இரத்மலானை, இங்குராக்கொட, சீனக்குடா, அநுராதபுரம்,
பலாலி, கத்துக்குருந்த, கொக்கலை, வவுனியா, வீரவில மற்றும் மத்தள ஆகிய
பகுதிகளில் அமைந்துள்ள விமான ஓடுதளங்களைச் சுற்றி அதிகளவில் பட்டம்
விடுவது தற்போது அதிக ஆபத்தான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, விமானப் பயணப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பயணிகளின்
உயிர்களைப் பாதுகாப்பதற்கும், விமான ஓடுதளங்கள் மற்றும் விமான
நிலையங்களைச் சுற்றி வசிக்கும் மக்கள் அத்தகைய வலயங்களுக்குள்
பட்டம் விடுவதைத் முழுமையாகத் தவிர்க்குமாறு விமானப்படை கோரியுள்ளது.

