வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி, பலாலி சந்தியில்
இன்று (27) ஆறாவது வாரமாகவும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 36 ஆண்டுகளாக தமது காணிகளை இழந்த மக்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக
நிலையங்களை முன்னெடுத்து வருவதாகவும், தாங்கள் நீண்டகாலமாக நிலமும்
வீடும் இன்றி வாழ்ந்து வருவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கடந்த வாரங்களில் போராட்டக்காரர்கள் பயன்படுத்தியதாகக்
கூறப்படும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான குடிநீர் தாங்கி
மற்றும் தற்காலிக மலசலக் கூடத்தை பலாலி பொலிஸார் அகற்றி பொலிஸ்
நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால்
இன்றைய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள்
இன்றி சிரமங்களை எதிர்கொண்டனர்.
தற்காலிக கொட்டகை அமைப்பதற்கோ அல்லது தரப்பாளை கட்டுவதற்காக தடிகளை நாட்டுவதற்கோ பொலிஸார் அனுமதி வழங்கவில்லை எனவும், இதனால்
முதியவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கைகளால் தரப்பாளைப்
பிடித்தபடி கடும் வெயிலிலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இன்றைய போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்
மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும்
கலந்துகொண்டனர்.

