தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து
துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது
செய்யப்பட்டுள்ளார்.
இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து
தெரிவித்த கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்
நிஷாந்த டி சொய்சாஇ சந்தேகநபர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக
தெரிவித்தார்.
கடந்த 19 ஆம் திகதி தெஹிவளை கல்கிசை நிசல செவன பொது மயானத்தில்
இருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் சூடு
நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
9 மில்லிமீட்டர் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு
நடத்தப்பட்டதில் குறித்த நபரின் இடது கை மற்றும் நெஞ்சுப் பகுதியில்
காயங்கள் ஏற்பட்டன.
காயமடைந்த அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் தெஹிவளை, கடற்றொழிலாளர் வீட்டுத்திட்ட
பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவராவார்.
துப்பாக்கிப் சூடு நடத்திய சந்தேகநபர்கள் ‘ஸ்கூட்டர்’ ரக மோட்டார் சைக்கிளில்
ஓட்டுநருடன் தப்பிச் சென்றிருந்த நிலையில், விசாரணைகளைத் தொடங்கிய
பொலிஸார் நேற்று (26) காலை தெல்கந்த பகுதியில் வைத்து மோட்டார்
சைக்கிளைச் செலுத்தியவரைக் கைது செய்தனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 7 கிராம் 200 மில்லிகிராம்
‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர் 25 வயதுடையவராவார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச்
சம்பவத்தை வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில்
ஈடுபடும் நபர் ஒருவரே வழிநடத்தியதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, இக்குற்றத்தைச் செய்வதற்காக 2 இலட்சம் ரூபாய் பணம்
வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 55, 000 ரூபாய் பணத்துடன் சந்தேகநபர்
பயன்படுத்திய 3 கைபேசிகளையும் பொலிஸார் இதன்போது
கைப்பற்றியுள்ளனர்.

