சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் தண்டனையை
இரத்து செய்வதற்கும், அவருக்கு சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான
உதவிகளை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்த் தேசியப்
பேரவையின் தலைவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம், இலங்கையின் வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சவூதி அரேபியாவில்
கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஆரம்பத்தில் அவருக்கு ஐந்து ஆண்டுகள்
சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட மேன்முறையீட்டின் தீர்ப்பில் அவருக்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், அனோஜனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கும்,
தண்டனையை இரத்து அல்லது குறைப்பதற்கும், சவூதி அரேபிய அதிகாரிகளுடன்
அவசரமான இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

