யாழ்ப்பாணம் அரியாலை – சிந்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பாக உண்மை
கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனக்கோரி ‘அணையா தீபம்’
போராட்டம் இன்று காலை ஆரம்பமானது
தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்றது.
இதற்கு தீர்வுகள் எதுவும் இதுவரை கிடையாத நிலையில் குறித்த விடயத்தை சர்வதேச
பார்வைக்கு கொண்டு செல்வதுடன்,அதனூடாக உறவுகளுக்கு நீதி கிடைக்க
வலியுறுத்தும் வகையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட வகையில் இந்த ‘அணையா தீபம்’
போராட்டம் இன்று செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின்
உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகனாதன்
தலைமையில், முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் சமயத் தலைவர்கள்,
அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள்,
பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து மலர் தூவி அஞ்சலித்தனர்.
குறிப்பாக செம்மணி மண்ணில் புதையுண்டுபோன உறவுகளுக்கு, நீதி வேண்டிய
போராட்டமாக ‘அணையா தீபம்’ என்ற பெயரில் குறித்த போராட்டம்
முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று காலை 10.10 மணியளவில் ஆரம்பிக்கப்பட குறித்த போராட்டமானது
23, 24, 25 ஆகிய 3 நாள்களுக்கு அகிம்சை வழியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை வேண்டி
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம்
முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ். வருகைதரவுள்ள ஐ.நா உயர் அதிகாரியின் பார்வைக்கு பிரச்சினையின் ஆழத்தை வலியுறுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு
வலுச்சேர்க்க வேண்டும் என சட்டத்ததணி வைஸ்ணவி சண்முகனாதன்
வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

