மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம்
பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள்
காயமடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
நேற்று இரவு 10 மணியளவில் குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில்
மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை, அங்கிருந்த
போக்குவரத்து பொலிஸார் ‘ரோச் லைட்’ அடித்து நிறுத்த முற்பட்டுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற இளைஞர்களை
வழிமறித்த பொலிஸார், அவர்களைத் தலைக்கவசத்தால் தாக்கியதாகக்
கூறப்படுகிறது.
தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே
விழுந்த பின்னரும், பொலிஸார் அவர்களைத் தொடர்ந்து தாக்கியதாக
அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
காயமடைந்த இளைஞர்கள் உடனடியாக செட்டிபாளையம் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து குருக்கள்மடம் பகுதியில் பெருமளவிலான
இளைஞர்கள் திரண்டதால் பதற்றம் உருவானது. இதனைத் தொடர்ந்து கார் மற்றும் பொலிஸ் வாகனங்களில் மேலதிக பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
இதன்போது பொலிஸாருக்கும் அங்கு திரண்டிருந்த இளைஞர்களுக்குமிடையே
கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
‘மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்குப் பல்வேறு சட்ட ரீதியான வழிகள்
இருந்தும்இ பொலிஸார் அராஜகமான முறையில் தலைக்கவசத்தால் தாக்கியது
கண்டிக்கத்தக்கது’ என அங்கிருந்தவர்கள் விசனம் தெரிவித்தனர்.
இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளைப் பொலிஸார் எடுத்துச்
சென்றுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து களுவாஞ்சிகுடி
பொலிஸ் நிலையத்தில் இளைஞர்களால் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு
பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன்
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

