முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம்
தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில், அதன் 3ஆம் நாளான இன்று
பிரித்தானியாவின் Ilford மற்றும் Wembley பகுதிகளில் முள்ளிவாய்க்கால்
கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில்,
தமிழீழ மக்களின் வரலாற்று வலியும் முள்ளிவாய்க்காலில் இலங்கை
அரசாங்கத்தால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இன அழிப்பின் கோறமும்
பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டது.
இறுதிக்கட்ட போரின்போது பட்டினியிலும் உயிர் தப்பிக்கப் போராடிய
மக்களின் அடையாளமாக மாறிய முள்ளிவாய்க்கால் கஞ்சிஇ பொதுமக்களுக்கு
வழங்கப்பட்டது.
அத்துடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாறு, அதன் குறியீட்டு அர்த்தம்
மற்றும் தமிழீழ மக்களின் நீதிக்கான போராட்டம் தொடர்பான விளக்கங்கள்
அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுகள் மூலம்
அடுத்த தலைமுறைக்கும் வேற்றின மக்களுக்கும் முள்ளிவாய்க்காலின்
உண்மை வரலாறு எடுத்துரைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவுகளை உயிரோட்டத்துடன் பேணிக்காக்கும்
நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வுகள், தமிழீழ மக்களின் தமிழீழம் நோக்கிய
நீதிக்கான போராட்டத்தின் தொடர்ச்சியாக அமைந்திருந்தன.

