வீடற்ற மற்றும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் இன்றைய தினம் கொழும்பு வடக்கு, நவகம்புர வட்டாரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் நேரடி அனுசரணையுடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால்
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டத்தின்
ஒரு அங்கமாக கொழும்பு பகுதியில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், கொழும்பு வடக்கு, நவகம்புர பகுதியில் மிகவும் அபாயகரமான
நிலையில் வசித்து வந்த முருகையா மாதவன் என்பவரது குடும்பத்திற்கு
புதிய வீடொன்றை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் மற்றும்
அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட வீட்டினைப் புனரமைப்பதற்காக, வீடமைப்பு அதிகார சபையின் பங்களிப்புடன் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை மற்றும் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஏ.பி. செல்வம், பிரதேச செயலாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

