கிளின் சிறீலங்கா திட்டத்தின் கீழ் பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரை பகுதியில் சுத்தப்படுத்தும் நடவடிக்கை இன்று (23) காலை 7 மணி முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தேசிய ரீதியான கிளின் சிறீலங்கா திட்டம் நாடு முழுவதும்நேற்றைய தினம்
காலை முதல் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இலங்கையின்
கரையோர பகுதிகளை தூய்மையாக்கும் வகையில் இச்செயற்றிட்டம்
முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் 52 வது படைப்பிரிவின் ஒழுங்கமைப்பில் பருத்தித்துறை
பிரதேச செயலகமும் சமூகமட்ட அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து
இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இத்தூய்மைப்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் கற்கோவளம் கடற்கரையில் காணப்பட்ட பிளாஸ்ரிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் தரம்பிரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு பருத்தித்துறை பிரதேச சபையின் திண்மக்கழிவகற்றும் வாகனத்தின் ஊடாக அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, 52 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் என்.எஸ்.எஸ்.டயஸ், பருத்தித்துறை பிரதேச செயலாளர் ந.திருலிங்கநாதன், உதவி பிரதேச செயலாளர் ப.தயானந்தன், காங்கேசன்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் விஜயரட்ன, பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி
கருணாரத்ன, பருத்தித்துறை, எள்ளங்குளம் மற்றும் கொடிகாமம் இராணுவ முகாம்களை சேர்ந்த படை அதிகாரிகள் உள்ளிட்ட இராணுவத்தினர், கரையோர மூல வளங்கள் பதுகாப்பு திணைக்களத்தின் யாழ் மாவட்ட பொறுப்பதிகாரி விஸ்ணு, பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினர், பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தினர், பருத்தித்துறை, கரவெட்டி பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள், கடற்றொழில் சங்கத்தினர், பிரதேச மக்கள் என பலரும் பங்கேற்று கிளின் சிறீலங்கா திட்டத்தின் கீழ் கற்கோவளம் கடற்கரையினை சுத்தப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

