புல்மோட்டை, அரிசிமலை பிரதேசத்தில் 4 வயது சிறுமியொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ தளத்தில் பதிவொன்றை இட்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ‘
பாதிக்கப்பட்ட குழந்தையின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மேலும் இதுபோன்ற துஷ்பிரயோகம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தக்கூடிய நீடித்த அதிர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.’ என்றும் ஜனாதிபதி தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘4 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே திகிலடைய செய்துள்ளது. நீதித்துறை செயல்முறையின் ஊடாக சம்பத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, அந்த குழந்தையின் நல்வாழ்வுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கு
அரச அதிகாரிகளிடமிருந்து விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடி ஆதரவை வழங்குவதற்கு அழைப்பு விடுத்ததுடன், அத்தகைய அதிர்ச்சியின் நீண்டகால தாக்கத்தை புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
‘இன்றைய சிறுவர்கள் இல்லாமல் நாளை இல்லை என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் அவர்களின் நலனே நமது மிக உயர்ந்த முன்னுரிமையாக இருக்க வேண்டும்.’ என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

