வலிகள் நிறைந்த இறுதிக்கட்ட போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை நீதி கிடைக்காத ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என தொழிற்கட்சி உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே உமா குமரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
‘ இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதில் பிரித்தானியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும். எமது பிரதமர் கியஸ்டாமர் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான கெத்ரின் மிஸ்க் போன்ற அனைவருமே தற்போதைய அரசாங்கம் அமைவதற்கு முன்னராக இருந்து
இலங்கை தமிழ் மக்களுக்கான நீதிக்காகவும் பொறுப்புக்காவும் போராடிய வண்ணமே உள்ளனர். மேலும் நல்லிணக்கத்தை பெற்றுக்கொடுப்பதற்காக குரல் கொடுத்தும் வருகின்றனர்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதில் பிரித்தானியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என நாம் ஆட்சிக்கு வரும் முன்பிருந்தே வலியுறுத்தி வருகின்றோம். நடந்த அனைத்துக்கும் பொறுப்பானவர்கள்
பதில் கூறியே ஆகவேண்டும்.
இறுதிக்கட்ட போரின் போது, தமிழர்கள் இடத்தில் ஏற்பட்ட வலிகளும் துன்பங்களும் மேலும் பதிந்துள்ள நினைவுகளும் ஒருபோதும் எம்மைவிட்டு போய்விடாது. இந்த வலிகளுக்கான நீதியை பெற்றுத்தருவதற்கான எந்தவொரு முயற்சியையும் இலங்கை அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை. எனவேஇ இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கவேண்டும்’ என்றார்

