1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி
வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும்
பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், கறுப்பு யூலை
நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (23) லண்டனில்
நடைபெற்றுள்ளது.
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு, சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் மற்றும்
பல தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வு,
பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை லண்டனிலுள்ள இலங்க உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.
1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி இலங்கையில் தமிழர்கள் மீது
மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல்
ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலி
செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற
கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் கறுப்பு நிற ஆடைகள் அணிந்து ஈழதமிழ்மக்கள், மனித
உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின்
பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்ததுடன்இ, நீதிக்கான கோரிக்கைகளை
வெளிப்படுத்தும் பதாகைகளை ஏந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச
நீதியும், பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

