புதுக்குடியிருப்பு பகுதியில் தேசியமக்கள் சக்தியின் பொதுக்கூட்ட நிகழ்வை, விளம்பரப்படுத்தும் முகமாக பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் தேர்தல் விதிமுறையினை மீறி காணப்படுவதாக, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய தேர்தல் கண்காணிப்பாளர்களால் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து, குறித்த இடத்திலிருந்து பதாதைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளைமறுதினம் (04.11.2024) நடைபெற இருக்கும் நிலையில் குறித்த கூட்டத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றார்.
குறித்த கூட்டத்திற்கு புதுக்குடியிருப்பு பேருந்து தரிப்பிடம் நிகழ்விற்கான முக்கிய இடமாக தேர்வு செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பேருந்து நிலையத்தில் நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டு இருந்ததனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய தேர்தல் கண்காணிப்பாளர்களால், முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து நேரடியாக வந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த பதாகைகளை உடனடியாக அகற்றியிருந்தார்கள்.

