யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் உணவுப் பொதியினுள் மறைத்து வைத்து
கஞ்சா மற்றும் ஹெரோயினை கொண்டு செல்ல முற்பட்ட இருவர், யாழ்ப்பாணம்
குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது உணவுப் பொதியினுள்
மறைத்து, போதைப்பொருள் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்
தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு 5 மில்லிகிராம் ஹெரோயின்
கொண்டு செல்ல முற்பட்டபோது, நேற்று (06) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய
பெண்ணாவார்.
இதேவேளை, யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஆண் ஒருவர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது நண்பரைப் பார்க்கச் சென்றபோது, 5 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் சிறிய அளவு கஞ்சாவுடன் நேற்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், இரு சந்தேக நபர்களையும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இருவரையும் இன்று (07) யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

