Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஈழ தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு திருமாவிடம் கஜேந்திரகுமார்...

ஈழ தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு திருமாவிடம் கஜேந்திரகுமார் அணி வலியுறுத்தல்

இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழ தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிரந்தர தீர்வினை பெற்று தர வேண்டும். அதற்கு தமிழக அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுங்கள் என தொல் திருமாளவனிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் வலியுறுத்தியுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சியை திறந்து வைக்க யாழ்ப்பாணம் வந்த  இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் ,

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 39 வருடங்களாக முடக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட விடயங்களை அமுல் படுத்தாமல் , ஒற்றையாட்சியின் கீழான 13ஆம் திருத்தம் என்கிற விடயத்தோடு நிற்கிறது. இதனால் தமிழ் மக்களின் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத நிலைமைக்கு சிக்கு பட்டு இருக்கிறோம்.

ஆகவே இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனில் இந்திய மத்தியஅரசு தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். இலங்கை பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இந்தியாவின் உதவி தேவை தெற்கில் இந்தியாவை எதிர்த்தவர்கள் கூட பொருளாதார காரணிகளுக்காக இந்தியாவுடன் ஒத்து போகும் நிலைமைக்கு வந்துள்ளனர். அதனால் இந்திய மத்திய அரசு இலங்கையுடனான பேரம் பேசும் தன்மை வலுப்பெற்று உள்ளது

இந்த நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை சந்தித்த ஈழ தமிழர்கள் இந்த சந்தர்ப்பை பயன்படுத்த வேண்டும். அதனால் தொல். திருமாவளவனை சந்தித்து இந்த விடயங்களை தெளிவு படுத்தியுள்ளோம்

தமிழகத்தின் ஆட்சியின் பங்காளி அவர். ஈழ தமிழர்களின் விடயம் தொடர்பிலும் , இன்றைக்கு இருக்க கூடிய 13ஆம் திருத்தம் தொடர்பிலும் அதில் உள்ள பிரச்சனைகள் தொடர்பிலும் மிக தெளிவாக எடுத்து கூறியுள்ளோம். அதேபோன்று இலங்கையில் உள்ள சட்டங்கள் தொடர்பிலும் தெளிவாக எடுத்து கூறியுள்ளோம்.

தமிழக அரசு , ஈழ தமிழர்கள் விடயங்கள் தொடர்பில் ஆணித்தரமான நிலைப்பாட்டை எடுக்க அவரின் ஒத்துழைப்பை மிக அவசியம். அதனை அவர் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என அவரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் இனவழிப்புக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருகிறது இன்றைக்கு உயிர்கள் பறிக்கப்படாது விடினும் எங்களுடைய இருப்பு இல்லாமல் போகிறது

பொருளாதார ரீதியாக தமிழ் தேசம் பலவீனம் அடைந்துள்ளது. தமிழ் மக்களின் பொருளாதார இருப்பு , திட்டமிட்டு வேறு தரப்பினருக்கு மாற்றப்படுகிறது

தமிழ் சிங்களம் முஸ்லீம் என்ற வேறுபாடு பேசாது நாம் இலங்கையர் என இந்த அரசாங்கம் கூறிக்கொண்டு தமிழர்களின் இருப்பை அழித்து வருகின்றனர்.

திட்டமிட்டு தமிழர்களை பலவீனப்படுத்தி வருகின்றனர். இதனை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேவேளை ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழகம் ஈழ தமிழர்கள் விடயத்தில் தொடர்ச்சியாக மௌனம் காத்து வருவதும் தமிழ் மக்களுக்கு பலவீனமாக உள்ளது

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஈழ தமிழர்கள் விடயத்தில் ஆக்கப்பூர்வமான விடயங்களை முன்னெடுத்து , அனைத்து தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வினை இலங்கை அரசாங்கம் வழங்க இந்தியவை அழுத்தம் கொடுக்க வைக்க வேண்டும் என அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இன்றைய சந்திப்பில் தொல் திருமாளவனிடம் நாம் வலியுறுத்தியுள்ளோம்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments