தந்தையின் அரவணைப்பில் இருந்த குழந்தை, தந்தைக்குத் தூக்கம் ஏற்பட்டதால்
அவரது கைகளிலிருந்து தவறி விழுந்து, தலை சீமெந்து தரையில் மோதியதில்
குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று அளுபோமுல்ல பிரதேசத்தில்
பதிவாகியுள்ளது.
படதொப துடுவ பிரதேசத்தை சேர்ந்த ருசேலி கெயாஷா என்ற இரண்டரை மாத
குழந்தை இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை அளுபோமுல்ல
பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த
நிலையில் குழந்தை உயிரிழந்ததுடன், தலையின் வலது பக்கம் ஏற்பட்ட காயம்
காரணமாக மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு இரத்தம் உறைந்தமையே
மரணத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
அதற்கமைய, மரண விசாரணை அதிகாரி இந்த மரணம் குறித்து மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டுஇ குழந்தையின் தாய் மற்றும் தந்தையை
அழைத்து இது குறித்து விசாரித்துள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில், மரணம் தொடர்பில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும்,
குழந்தைக்கு எவ்வித விபத்தும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த குழந்தையின் தந்தை
பொலிஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

