Friday, April 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்- அருட்தந்தை சிறில் காமினி

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்- அருட்தந்தை சிறில் காமினி

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும்
விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என
அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

‘இது 300 மனித உயிர்களைப் பலிகொண்ட ஒரு காட்டுமிராண்டித்தனமான
தாக்குதலாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் உயிர்த்த ஞாயிறுத்
திருப்பலியில் கலந்துகொள்ளச் சென்றவர்கள். உயிரிழந்தவர்களில் அனைத்து
மதங்களையும்,  அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
இது ஒரு படுகொலையாகும்.

இதன் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிவது என்பது,  இந்நாட்டில்
சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை எவரும்
புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். அவ்வாறு இல்லாவிட்டால்,  சிலர்
சட்டத்திற்குப் பயப்படுவதில்லை என்பதே அதன் பொருளாகும். ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு மறைந்திருக்க முடியும் என்பது உறுதியாகிறது. எனவே,  குற்றங்கள் செய்வதற்குப் பயமின்மை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவோரையும்,  கைது செய்யப்படுவதற்குப்
பல்வேறு வியாக்கியானங்களை அளிப்போரையும் பார்க்கும் போது புரிகிறது,
அவர்களின் பின்னணியில் உள்ள நிகழ்ச்சி நிரல் என்னவென்று. எனவே இதனை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை. இது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் ஒரு சுயாதீனமான விசாரணையாகும். அந்த விசாரணைகளைச் சுயாதீனமாக முன்னெடுக்க இடமளிப்பதே சிறந்தது.

அவ்வாறின்றி இந்த விசாரணைகளைக் குழப்புவதற்கு மேற்கொள்ளப்படும்
முயற்சிகளை,  இத்தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழைக்கப்படும் அநீதியாகவே நாம் பார்க்கிறோம். எனவே,  நாம் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது என்னவென்றால்,  இந்த விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம். இந்த விசாரணைகள் தொடர வேண்டும். இவ்விசாரணைகள் மூலம் ஏதேனும் ஒரு பலன் கிடைக்கும் என நாம் நம்புகிறோம்.

இதன் மூலம்,  பலர் பேசுகின்ற அரசியல் சதியொன்று இருந்ததா இல்லையா
என்பதையும்,  அவ்வாறு இருந்திருந்தால் அதனைச் செய்தது யார்? இத்தாக்குதல்
ஏன் நடத்தப்பட்டது? போன்ற விடயங்களை நாம் கட்டாயம் கண்டறிய
வேண்டும். அதற்கு எவரேனும் இடையூறு விளைவிப்பார்களாயின்,  அதனைப்
பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகச் செய்யப்படும் ஒரு மாபெரும் குற்றமாகவே
நாம் கருதுகிறோம். எனவே,  தயவுசெய்து இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல இடமளித்து,  பொறுமையுடன் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments