மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள
வீடு ஒன்றில் கடந்த ஆம் திகதி 04 இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண் ஒருவர் உள்ளடங்களாக நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பெருந்தொகை பணம் ஆகியவற்றையும் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மன்னார், சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த
04 ஆம் திகதி இரவு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளமை குறித்து
குறித்த வீட்டின் உரிமையாளர் நேற்று (05) மன்னார் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்போது குறித்த வீட்டில் தாலிக்கொடி, சங்கிலி, காப்பு உள்ளடங்களாக
15 பவுன் தங்க நகைகளும், 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல்
போயுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
குறித்த முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.என்.கெட்டியாராச்சி இன் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் பத்தே விதான, பொலிஸ் சாஜன் சிவ ராஜா(53207), பொலிஸ் கொஸ்தபல்களான சஞ்ஜீவ ராஜ் (37747), கருணாரத்ன (105221), பெண் பொலிஸ்கொஸ்தபில்களான ரஜித்தா (10137), ஓவியா (12439) ஆகியோர் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது பிரதான சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏனைய சந்தேக நபர்கள்
கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சுமார் 56 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.

