யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (29) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளதாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில், கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி
பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில்
இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பெரியஉளுக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ். தில்ஹால் சதுரங்க (30) தனது
மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது
இந்த அனர்த்தம் நேர்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் தில்ஹால் சதுரங்க சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, பலத்த காயமடைந்த அவரது மனைவி
வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வருகிறார்.

