லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகநாந்தன் காணாமல் போன வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணொளி வாயிலாக சாட்சியமளிக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2011 டிசம்பர் 10 அன்று யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த இரு
செயற்பாட்டாளர்கள் தொடர்பான வழக்கு, அவர்களின் உறவினர்களால்
தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் பல ஆண்டுகளாக விசாரணையிலுள்ளது.
அச்சம்பவத்தின்போது பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முன்னதாகவே நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. அவர் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக உயர் நீதிமன்றத்திலும் உறுதிமொழி வழங்கியிருந்தார்.
ஆனால் பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி நேரில் ஆஜராக முடியாது என
தெரிவித்ததைத் தொடர்ந்து, தற்போது காணொளி வாயிலாக சாட்சியமளிக்க
நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

